காரிமங்கலம், ஜூலை 09:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 16 பயணிகள் காயமடைந்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கி 'குமரவேல்' என்ற தனியார் பேருந்து (பதிவு எண்: TN 29 BF 4700) தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. காரிமங்கலத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் பேருந்தை ஓட்டிச் சென்றார். பொன்னேரி கிராமம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் இடதுபுற பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 16 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த காரிமங்கலம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
விபத்து தொடர்பாக காரிமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.gif)

