Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பவர் ஆப் அட்டார்னி (பிஓஏ)என்றால் என்ன? மற்றும் அதன் வகைகள் - ஒரு பார்வை.

பவர் ஆப் அட்டார்னி (பிஓஏ)என்றால் என்ன? மற்றும் அதன் வகைகள் - ஒரு பார்வை.


பொதுவாக ஒரு நபரின் சொந்தச் பணிச்சுமையாலோ, தொழில் ரீதியாகவோ, அவர் பணியை ஏதோ ஒரு காரணத்தால் நேரடியாக நிறைவேற்ற முடியாத நிலையில், அந்தப் பணியினை நிறைவு செய்ய, சட்டப்படி அதிகாரப் பத்திரம் மூலம் ஒருவரை நியமித்து அந்தப் பணியினை நிறைவேற்றிக் கொள்ளலாம்.   

இவ்வாறு தன்னுடைய பணியை, தன்னுடைய நிலையில் வேறொருவர் இருந்து அந்தப் பணியினை செய்து கொடுக்கத் தயாரிக்கப்படும் அதிகாரப்பத்திரமே ‘பவர் ஆப் அட்டார்னி’ (அங்கீகாரம் பெற்ற நபர்) என்று கூறப்படுகிறது..   இந்த அதிகாரம் ஒரு தனி நபருக்கோ அல்லது சிலருக்கோ, அதிகாரம் பெற்றவரால் ஒப்பந்தபத்திரம் மூலம் வழங்கப்படும்.

ரியல் எஸ்டேட் துறையில் இது அதிகம் காணப்படும் ஒன்று. மாறிவரும் இன்றைய உலகத்தில், தனது அசையா சொத்துகளை விற்பனை செய்ய அதன் உரிமையாளர் வாங்குவோரை தேடி செல்ல போதிய சமயம் கிடைப்பதில்லை. அதை செய்வதற்காக தனிநபரிடம் பொறுப்பு ஒப்படைக்கிறார்கள். இந்த திட்டம் பல வழிகளில் நன்மை கொடுத்து வருகிறது.

இப்படி பவர் பத்திரம் எழுதிக் கொடுப்பவரை முதன்மையாளர் (Principal) என்றும், அதிகாரம் பெறப்பெற்றவர்  முகவர் என்றும்  சொல்வார்கள். ‘பவர் ஆப் அட்டார்னி’ (பிஒஏ) எழுதி பெற்றவர், சொத்துக்கான உண்மையான உரிமையாளர் கிடையாது. சொத்தை பரிமாற்றம் செய்வதற்காக ஆயுத்த பணிகள் மேற்கொள்ளும் அதிகாரம் மட்டுமே பெற்றவராவார்.

2010 நவம்பர் முதல் பவர் பத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் புத்தகம் 1-ல் பதிவுசெய்யப்படுகிறது. இதன்மூலம் நவம்பர் 2010-க்குப் பிறகு பதிவு செய்த பவர் பத்திரத்தின் விவரங்கள், தமிழ் நாட்டின் சொத்து வில்லங்கச் சான்றிதழில் இடம் பெறுகின்றன. இந்த அம்சம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் செயலில் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதன்மையாளர் மட்டும் பவர் பத்திரத்தில் கையெழுத்துப் போட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது  முதன்மையாளர் மற்றும் முகவரின் கையெழுத்து, புகைப்படம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.


பவர் ஆப் அட்டார்னியில் இரண்டு விதம்:

1. பொது பவர் ஆப் அட்டார்னி (General power of attorney or GPA)

2. சிறப்பு பவர் ஆப் அட்டார்னி (Special power of attorney)


1. பொது பவர் ஆப் அட்டார்னி (General power of attorney or GPA):

ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளில் ஈடுபட பிஓஏ எழுதி கொடுத்தவருக்கு ஆதரவாக செயல்படுபவருக்கு பொது பவர் ஆப் அட்டார்னி அல்லது ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி என்று பொருள். உதாரணமாக சொத்தை நிர்வகிக்க, வரி செலுத்தி வர, அடமானம் வைத்து கொள்ள, அடமான பத்திரம் எழுதி கொடுக்க வாடகை & லீசுக்கு விட, கட்டிடம் கட்ட, அப்ரூவல் வாங்க, வாடகை வசூல் செய்ய, வாடகைதாரரை காலி செய்ய, கோர்ட்டில் வழக்கு தொடர வக்கீல் நியமிக்க, மற்ற இதர அரசு அலுவலங்களுக்கு சொத்து சம்பந்தமான வேலைகளை செய்ய என அனைத்து வேலைகளுக்கும் பவர் கொடுத்து ஏஜென்ட் வைத்து கொள்ளுதல் ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி ஆகும்.

02. சிறப்பு பவர் ஆப் அட்டார்னி (Special power of attorny):

ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி என்பது ஒரே ஒரு வேலையை மட்டும் செய்வதற்காக கொடுக்கும் பவர் பத்திரம் ஆகும். நீதிமன்றத்தில் வழக்கு தொடர மனுதாரர் தனக்கு பதிலாக வேறு ஒரு நபரை ஏஜென்ட்டாக நியமித்து பவர் கொடுப்பது . வெளிநாட்டில் இருக்கும் ஒரு நபர் தனக்கு பதிலாக சொத்தை வாங்குவதற்கு ஒரு ஏஜென்ட்டை நியமித்து பவர் கொடுப்பது போன்றவை ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி.

அசையா சொத்து – பவர் ஆப் அட்டார்னியை யார் எழுதி கொடுப்பது?

சொத்துக்கு உண்மையான உரிமையாளர் அல்லது வாரிசு தாரராக இருந்து, அந்த சொத்து நீதிமன்ற தகராறில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் சொத்து உரிமையாளர் தனது சொத்தை விற்பனை செய்வது தொடர்பாக பிஓஏ எழுதி கொடுக்கும் உரிமைபெற்றுள்ளார். மேலும் பிஓஏ எழுதி கொடுப்பவர் சீரான மனநிலையில் இருக்க வேண்டும். சொத்து திவாலாகி இருக்ககூடாது. தனது சொத்து விற்பனை செய்வதற்கான அதிகாரத்தை மட்டுமே பிஓஏவில் குறிப்பிட வேண்டும்.

சொத்து உரிமையாளராக பிஓஏ பெறுபவரை சித்தரிக்க கூடாது. பிஓஏ எழுதும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் 5 பேர் சொத்துக்கு வாரிசாக இருக்கும் பட்சத்தில், அனைவரும் தனித் தனியாக பிஓஏ எழுதி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

  • குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும்.
  • அவர் மூன்றாவது நபருக்கு அதிகாரம் எழுதி கொடுக்கலாம்.
  • பவர் ஆப் அட்டார்னி – ரியல் எஸ்டேட் ஏஜென்ட் / ப்ரொமோட்டர் / டெவெலப்பர்.

சில ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஓன்றுக்கு மேற்பட்ட பங்குதாரர்கள் இருப்பார்கள். அதனிடம் யாராவது தங்கள் சொத்தை விற்பனை செய்து கொடுக்கும் பொறுப்பை ஒப்படைக்கும் பட்சத்தில், நிறுவனத்தில் உள்ள தனிநபர் சொத்தை விற்பனை செய்ய முடியாது. பங்குதாரர்கள் கூட தங்களில் ஒருவருக்கு விற்பனை செய்யும் அதிகாரத்தை எழுத்து மூலம் வழங்க வேண்டும். இதை இன்டர்னல் பவர் ஆப் அட்டார்னி என்று அழைப்பாளர்கள். 

சொத்து விற்பனை பேச்சு முடிந்தபின், சொத்தின் உண்மையான உரிமையாளருக்கு மட்டுமே கிரைய பத்திரத்தில் கையெழுத்து போடும் அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரம் விற்பனை பொறுப்பேற்கும் நிறுவனத்திற்கோ, அதன் பங்குதாரர்களுக்கோ கிடையாது.

இந்த அதிகாரப் பத்திரமே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படும் ஒன்றுதான். பெரும்பாலும்  வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், மூத்த குடிமக்கள், பெண்கள் ஆகியோரே தங்களின் பணியை செய்ய வேறொருவரை நியமிப்பதை அதிகமாகக் காண முடிகிறது.  

‘நம்பினார் கெடுவதில்லை’ என்பது நான்மறை தீர்ப்பு. இந்த உலகம் இயங்குவதே நம்பிக்கையின் அடிப்படையில்தான். தன் மீது வைக்கும் நம்பிக்கையை விடவும், மற்றவர் மீது வைக்கும் நம்பிக்கை போற்றுதலுக்குரிய ஒரு செயல். ஒருவேளை நம்பிக்கைக்கு உரியவர் அந்த நம்பிக்கையை தகர்க்கும்போது ஏற்படும் ஏமாற்றம், இழப்பு சில நேரங்களில் ஈடு செய்ய முடியாததாக இருக்கும். இருமுனை கூர் கத்தி போன்றது அதிகாரப் பத்திரம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.