அரூர், ஜூலை 7:
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மான் வேட்டையாடி இறைச்சியை பங்கு பிரித்துக் கொண்டிருந்த மூன்று பேரை வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்து, அவர்களுக்கு மொத்தம் ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
தருமபுரி மாவட்ட வன அலுவலருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கோட்டப்பட்டி வனச்சரக அலுவலர் பெரியண்ணன் தலைமையில், பிரிவு வனவர் பன்னீர்செல்வம், வனக்காப்பாளர்கள் பவித்ரன், சக்தி, வனக்காவலர்கள் ராம்குமார், இளையராஜா, முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மந்திகுளம்பட்டி காப்புக்காட்டை ஒட்டிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர்.
அப்போது, காந்திநகர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவு மகன் தவமணி (51), துரைசாமி மகன் குப்பன் (47) மற்றும் மாயவன் மகன் சங்கர் (44) ஆகியோர் சட்டவிரோதமாக மானை வேட்டையாடி, அதன் இறைச்சியை வெட்டி பங்கு பிரித்துக் கொண்டிருந்தபோது வனத்துறையினரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டனர். இதையடுத்து, வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து, தருமபுரி மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி, குற்றத்தில் ஈடுபட்ட மூவருக்கும் தலா ரூ.80,000 வீதம், மொத்தம் ரூ.2,40,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதுடன், இனி இதுபோன்ற வனவிலங்கு வேட்டையில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்து வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.
வனவிலங்குகளை வேட்டையாடுதல், அவற்றின் இறைச்சியை வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்டவை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றங்கள் என்பதால், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
.gif)

