தருமபுரி, ஜூலை 2:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட அ.பள்ளிப்பட்டி ஊராட்சியில் உள்ள சாலூர் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருப்பதால், குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழலில் செயல்பட்டு வரும் பழைய மையத்தில் பயனடைந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
சாலூர் கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் கிராமத்தைச் சேர்ந்த சிறு குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய சூழலை ஏற்படுத்தும் நோக்கில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு, பணிகள் பல மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை அந்தக் கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக, தற்போது அங்கன்வாடி மையம் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பாதுகாப்பற்ற மற்றும் சுகாதாரமற்ற சூழலில் இயங்கி வருகிறது. இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
எனவே, புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, பழங்குடியின குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

.jpg)