தருமபுரி, ஜூன் 26:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்டப் பிரிவு சார்பில், “ஸ்டார்ட் RUN, ஸ்டாப் DRUGS – போதைப்பொருள் ஒழிப்பு ஓட்டம் 2026” நிகழ்ச்சி மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற்றது. தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், இ.ஆ.ப., கொடியசைத்து ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கிய ஓட்டம், நான்கு ரோடு வழியாக பாரதிபுரம் வரை சென்று மீண்டும் விளையாட்டரங்கில் நிறைவடைந்தது. சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஓட்டத்திற்காக குடிநீர், சிற்றுண்டி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டதுடன், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நிகழ்ச்சி டி-ஷர்ட்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ். சிவரஞ்சன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோ. விஜயா, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், உதவி ஆணையர் (கலால்) கோபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)