காரிமங்கலம், செப்டம்பர் 04 (ஆவணி 19)
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த தமிழரசன் (30) மற்றும் அவரது மனைவி மாலதி (27) ஆகியோர் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.
தமிழரசன், அதே ஊரைச் சேர்ந்த திம்மக்காள் மற்றும் மாறன் ஆகியோரிடம் சீட்டில் பணம் கட்டியிருந்ததாகவும், இவருக்கு தர வேண்டிய 5 லட்சம் ரூபாய் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்த தமிழரசன், தனது பணத்தை கேட்டும் பெற முடியாமல் மனமுடைந்து, நேற்று இரவு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு விரைந்து சென்று அவரை மீட்டு, அனுமந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து, தொடர்ந்து பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இன்று பாலக்கோடு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டபோது, தமிழரசனின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு, “இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம்” என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து டி.எஸ்.பி. மனோகரன், பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் உடலை பெற்றுக்கொண்டு அடக்கம் செய்தனர்.
இச்சம்பவம் காரிமங்கலம் பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

