1077 - முதலமைச்சரின் தனிப்பிரிவில் முறையிட்டும் பயனளிக்கவில்லை; சமூக ஆர்வலர்கள் புகார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 மே, 2025

1077 - முதலமைச்சரின் தனிப்பிரிவில் முறையிட்டும் பயனளிக்கவில்லை; சமூக ஆர்வலர்கள் புகார்.


தருமபுரி:

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெங்கடசமுத்திரம் வருவாய் கிராமத்தில் உள்ள கோழிமேக்கனூர் (ஜாலிக்காடு) கிராமத்தில் பொதுமக்களின் தேவைக்காக தெருவிளக்குகள் நிறுவப்பட்டிருந்தன. குறிப்பாக, 08-130-014-150 என்ற மின் இணைப்பு எண் உட்பட்ட தெருவிளக்குகள் ஜூலை 2021 வரை மட்டுமே செயல்பட்டுள்ளன.


அதற்குப் பிறகு, 2022 முதல் 2025 வரை தொடர்ந்து தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால், கிராம மக்கள் இரவுப்பொழுதில் அதிக அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும், இந்த பயன்பாடற்ற மின் இணைப்புக்கான மின்வாரியக் கட்டணம் ரூ.4,258 வரை நிலுவையில் உள்ள நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி நகராட்சி இதுவரை அதை செலுத்தாததோடு, பராமரிப்பிலும் முழுமையாக பின்வாங்கியுள்ளது.


இந்த அவல நிலையைத் தீர்க்க, பொதுமக்கள் முதலில் 1077 தொலைபேசி வழி புகார் செய்துள்ளனர். பின்னர், முதலமைச்சரின் தனி பிரிவிலும் (புகார் எண்: RD(TN/RDPR/DPI/P/PORTAL/18JUL2022/4087015)) முறையீடு செய்துள்ளனர். எனினும், இதுவரை மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கவலையையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோழிமேக்கனூர் கிராம மக்கள், மின்வாரியத்துக்கு நிலுவைத் தொகையை நகராட்சி செலுத்தி, தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு மீண்டும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அரசு நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad