பாலக்கோடு, பிப்.25:
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுயம்பு ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருக்கோயிலின் மாசி மாத திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கத்தின்படி இந்த ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று, 12 கிராம மக்கள் ஒன்றிணைந்து உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பூகரகம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு முறைகளில் பக்தர்கள் ஈடுபட்டனர். சிலர் அம்மன் வேடம், காளி வேடம் அணிந்தும், லாரி இழுத்தும், அந்தரத்தில் தொங்கியபடி ‘விமானம்’ சென்றும், காவடி ஆட்டம், கோலாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுடன் சண்டை மேளம் முழங்க பக்தியுடன் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெண்கள் மாவிளக்கு தட்டு மற்றும் பூஜை பொருட்களுடன் திரௌபதி அம்மன் திருக்கோயிலில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சுயம்பு ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோயிலை அடைந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் 12 கிராம ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
.gif)

