தருமபுரி, ஆகஸ்ட் 12:
இயற்கை சீற்றங்களால் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஏற்படும் இழப்புகளில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் 2026–27ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது நிலவும் எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், குறுவை மற்றும் மானாவாரி தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு, 2026ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் வாழை, மஞ்சள் மற்றும் தக்காளி ஆகிய பயிர்கள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு பிரீமியம் – அதிகபட்ச இழப்பீடு
| பயிர் | விவசாயி செலுத்த வேண்டிய தொகை | அதிகபட்ச இழப்பீடு |
|---|---|---|
| 🍌 வாழை | ரூ.1,935 | ரூ.38,700 |
| 🌿 மஞ்சள் | ரூ.4,200 | ரூ.84,000 |
| 🍅 தக்காளி | ரூ.1,771 | ரூ.37,600 |
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து குறுவட்டங்களுக்கும் வாழை, மஞ்சள் மற்றும் தக்காளி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான இலக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கிய காலக்கெடு
அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு 25.06.2026 முதல் பயிர் காப்பீடு செய்யலாம்.
- தக்காளி – 31.08.2026 வரை
- வாழை – 15.09.2026 வரை
- மஞ்சள் – 15.09.2026 வரை
காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி எக்காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மகசூல் இழப்பு, விதைப்பு அல்லது நடவு செய்ய இயலாத நிலை, விதைப்பு அல்லது நடவு பொய்த்தல், பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சிக் கால இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பு, அறுவடைக்குப் பிந்தைய இழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.
எவ்வாறு காப்பீடு செய்வது?
கடன் பெறும் விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம்.
கடன் பெறாத விவசாயிகள், பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தின் “விவசாயிகள் கார்னர்” வாயிலாக நேரடியாக பதிவு செய்யலாம்.
காப்பீடு செய்யும்போது கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
- முன்மொழிவு விண்ணப்பம்
- பதிவு விண்ணப்பம்
- கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை
- வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்
- ஆதார் அட்டை நகல்
காப்பீட்டு கட்டணத்தை செலுத்திய பின்னர் ரசீதை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், ரசீதில் காப்பீடு செய்யப்பட்ட பயிர், கிராமம், குறுவட்டம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் விவசாயிகள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு பாப்பிரெட்டிப்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளை அணுகலாம். பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், காலக்கெடுவுக்குள் பயிர் காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளில் இருந்து தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
.gif)

.jpg)