கடத்தூர், ஆக.26:
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள அம்பாளப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் 168 மாணவ, மாணவிகளுக்கு, தனியார் தொழிலதிபர்கள் தாமாக முன்வந்து ஜெர்சி சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை நன்கொடையாக வழங்கினர்.
பள்ளியில் பயிலும் நலிவுற்ற மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்கள் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. எதிர்கால இந்தியாவை வலுவாக்கும் நோக்கில் தொழிலதிபர்கள் தாமாக முன்வந்து மேற்கொண்ட இந்த உதவி நடவடிக்கை கிராம மக்களிடமும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மாயா பவுண்டேஷன் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கடத்தூரில் இயங்கி வரும் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த புது ரெட்டியூர் சரத்குமார், விமல் நாதன், MSR Group of Companies-ஐச் சேர்ந்த எஸ். ரத்தினவேல், பெரியண்ணன், வினோத்குமார், தமிழரசன், கவிவேந்தன், நந்தகுமார் உள்ளிட்டோர் நன்கொடைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினர்.
தருமபுரியின் மாதிரி பள்ளியாக தேர்வு
நிகழ்ச்சியில் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜ்குமார், நலிவுற்ற நிலையில் இருந்து வரும் அம்பாளப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி, தருமபுரி மாவட்டத்தில் மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிக்கு தொழிலதிபர்கள் தாமாக முன்வந்து நன்கொடை வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், இதுபோன்ற சமூகநலப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி செயலாளர் பட்டாபி கலந்து கொண்டு நன்றி தெரிவித்தார்.
தொழிலதிபர்களின் இந்த மனிதநேய உதவியால் மாணவர்கள் உற்சாகமடைந்ததுடன், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியமானது என்பதை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.
.gif)

.jpg)