தருமபுரி, ஆக. 25 :
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, 60 வயது நிறைவடைந்த பின்னர் மாதந்தோறும் ரூ.3,000 உறுதியான ஓய்வூதியம் வழங்கும் பங்களிப்பு அடிப்படையிலான பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் 18 முதல் 40 வயது வரையிலான தகுதியுடைய அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தில் பயனாளிகள் தங்களது வயதுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட தொகையை மாதந்தோறும் செலுத்த வேண்டும். அதே அளவிலான தொகையை மத்திய அரசும் இணைப் பங்களிப்பாக செலுத்தும். இதன் மூலம் பயனாளிகள் 60 வயதை நிறைவு செய்த பின்னர் மாதந்தோறும் ரூ.3,000 உறுதியான ஓய்வூதியம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யாரெல்லாம் பயன்பெறலாம்?
தருமபுரி மாவட்டத்தில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய,
- சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்
- வாகன ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள்
- விடுதி மற்றும் விருந்தோம்பல் துறை பணியாளர்கள்
- துப்புரவு பணியாளர்கள்
- கைவினைக் கலைஞர்கள்
- தெருவோர வியாபாரிகள்
- கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள்
- உணவகம் மற்றும் உணவு சேவை வழங்குநர்கள்
- சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பிற சேவை வழங்குநர்கள்
உள்ளிட்ட தகுதியுடைய அமைப்புசாரா தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
எப்படி பதிவு செய்வது?
தகுதியுடைய தொழிலாளர்கள் ஆதார் அட்டை, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம் மற்றும் செல்போன் எண்ணுடன் அருகிலுள்ள பொதுச்சேவை மையத்தை அணுகி, திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இத்திட்டம் தொடர்பான பதிவுகளை www.maandhan.in இணையதளத்தின் வாயிலாக மேற்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை வளாகம், தருமபுரி – 636 705 என்ற முகவரியிலும், 04342-230705 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)