தருமபுரி, ஆகஸ்ட் 4:
தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தருமபுரி மாவட்டத்தில் ரூ.70 கோடிக்கும் அதிக மதிப்பிலான கல்வி மற்றும் குடியிருப்பு மேம்பாட்டு திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதில், பூமாண்டஹள்ளி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.6.35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திறன்மிகு மையக் கட்டிடமும், பாலக்கோடு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திறன்மிகு மையக் கட்டிடமும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன. மேலும், நல்லம்பள்ளி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.57.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 528 அடுக்குமாடி குடியிருப்புகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., பூமாண்டஹள்ளி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய திறன்மிகு மையக் கட்டிடத்தை பார்வையிட்டார்.
நவீன வசதிகளுடன் திறன்மிகு மையங்கள்.
பூமாண்டஹள்ளி மற்றும் பாலக்கோடு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் தலா இரண்டு தளங்களுடன் சுமார் 1,428.98 சதுர மீட்டர் பரப்பளவில் திறன்மிகு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், உற்பத்தி ஆய்வகம், பொருள் உற்பத்தி பிரிவு, குழாய் வேலைப்பகுதி, கார் லிப்ட், ரோபோட்டிக்ஸ் பணிமனை, பேட்டரி மற்றும் ஆட்டோ எம்.ஆர்.ஓ. பணிமனைகள், செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML), இணைய பொருட்கள் (IoT), மெஷினிங், PDD/PLM வகுப்பறைகள், வீசாட் வகுப்பறை, காணொளி மற்றும் கலந்தாய்வு அறைகள் உள்ளிட்ட நவீன வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த மையங்கள் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் ஜார்ஜ், செயற்பொறியாளர் ஜனார்த்தனன், பூமாண்டஹள்ளி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரோஜா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)