பாலக்கோடு, ஜூலை 29:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தெரிவித்த தகவலின்படி, பென்னாகரம் அருகே ஏரியூர் பூதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (19), பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி பகுதியைச் சேர்ந்த சபரி (23), அதே கல்லூரியில் எம்.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
ஒரே கல்லூரியில் படித்து வந்த இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த உறவுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பெற்றோரின் எதிர்ப்பை அடுத்து பாதுகாப்பு கோரி பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதையடுத்து, இரு தரப்பினரின் பெற்றோர்களையும் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், தான் விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும், கணவருடன் செல்ல விரும்புவதாகவும் இளம்பெண் காவல்துறையினரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அவரது விருப்பத்தின் அடிப்படையில் காவல்துறையினர் உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு தம்பதியரை ஒன்றாக அனுப்பி வைத்தனர்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.gif)

.jpg)