பாலக்கோடு, ஜூலை 4:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாலக்கோடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டி பிரிவு சாலையில் மூன்று வாலிபர்கள் கையில் பைகளுடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். போலீசாரைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனடியாக போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் பாலக்கோடு மைதீன் நகரைச் சேர்ந்த அமீன் (20), புதுப்பட்டாணியர் தெருவைச் சேர்ந்த முகமது சல்மான் (26) மற்றும் சான்கான் தெருவைச் சேர்ந்த பர்வேஸ் அகமது (31) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த பைகளை சோதனை செய்தபோது, 150 கிராம் கஞ்சா சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தருமபுரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது மற்றும் வேறு யாருக்கெல்லாம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது என்பது குறித்து பாலக்கோடு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.gif)

