தருமபுரி, ஜூலை 1:
தருமபுரி மாவட்டம் பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான 12675/12676 கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் 16315/16316 திருவனந்தபுரம்–மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பொம்மிடி ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மேலும், கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்ததைப் போல அரக்கோணம்–சேலம் மெமு ரயிலுக்கு டேனிஷ்பேட்டை ரயில் நிலையத்தில் மீண்டும் நிறுத்தம் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே பயணிகள் சங்கம், பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து வழங்கிய மனுவில், பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், வணிகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பயண வசதியை மேம்படுத்தும் வகையில் மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பொம்மிடி ரயில் நிலையத்தில் நிரந்தர நிறுத்தம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கொரோனா காலத்திற்கு முன்பு செயல்பாட்டில் இருந்த அரக்கோணம்–சேலம் மெமு ரயிலின் டேனிஷ்பேட்டை நிறுத்தம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டால், அப்பகுதி மக்களின் அன்றாடப் பயணம் மிகவும் எளிதாகும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தென்னக ரயில்வே பயணிகள் சங்கத் தலைவர் காமராஜ், செயலாளர் அறிவழகன், பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் ஆசாம்கான், செயலாளர் ஜெபசிங், துணைத் தலைவர் சங்கீதாஸ்ரீ, துணைச் செயலாளர்கள் இளங்கோவன், வெங்கடேசன், ரஃபீக் மற்றும் கௌரவ உறுப்பினர்களான முருகன், கேசவன், கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)