பென்னாகரம், ஜூலை 1:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வட்டுவனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட பவளந்தூர் கிராமத்திற்கு புதிய பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை தொடங்கப்பட்டதையொட்டி, கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பவளந்தூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பென்னாகரம், மாமரத்துப்பள்ளம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் காலை நேரங்களில் பேருந்து வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்கும் காலதாமதத்திற்கும் ஆளாகி வந்தனர்.
இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பவளந்தூர் கிராமத்திற்குள் பேருந்து சேவையை நீட்டிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று, நகரப் பேருந்து எண் 26C நாள்தோறும் மூன்று முறை பவளந்தூர் கிராமத்திற்குள் இயக்க போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய வழித்தட நீட்டிப்பு சேவை தொடக்க விழா நடைபெற்றது. விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சிவன் பேருந்துக்கு பூஜை செய்து, கொடியசைத்து புதிய சேவையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனை மேலாளர் சுதாகர், தவெக பென்னாகரம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித், மாவட்ட இணைச் செயலாளர் வீரமணி, மூர்த்தி, ஒன்றிய பொறுப்பாளர்கள் பன்னீர், கார்த்திக், கணேசன், சந்தோஷ், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தங்கராஜ், குமார், விவசாய அணி பொறுப்பாளர் மணி, கவின், மணி, கிருஷ்ணன், விமல்ராஜ், பச்சியப்பன், பவளந்தூர் ஊர் கவுண்டர் மூர்த்தி, நாகராஜ், சின்ன கவுண்டர், தமிழ்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஏராளமான கிராம பொதுமக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று, நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த பேருந்து சேவை தொடங்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, அரசுக்கும் போக்குவரத்துத் துறைக்கும் நன்றி தெரிவித்தனர்.
.gif)

.jpg)