தருமபுரி, ஜூலை 8:
தருமபுரி வனக்கோட்டம், அரூர் வனச்சரகத்தின் சார்பில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், சித்தேரி மற்றும் நலமாங்கடை கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கான சூழல் மேம்பாட்டு குழு வாழ்வாதார திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. சம்பத் குமார் மற்றும் அரூர் வனச்சரக அலுவலர் என். வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து, பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினர்.
பயிற்சியில் சுமார் 35-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தையல் தொழிலில் சுயதொழில் தொடங்கும் வகையில் தேவையான தையல் பயிற்சி உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், பயிற்சி பெற்ற பெண்கள் தங்களது திறமைகளை தொழிலாக மாற்றி குடும்ப வருமானத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான அடுத்தகட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளையும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர். இந்த வாழ்வாதார திறன் மேம்பாட்டு பயிற்சியை ஸ்ரீ தேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனர்கள் ஒருங்கிணைத்து நடத்தினர்.
இப்பயிற்சி மூலம் கிராமப்புற பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதுடன், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் சமூகங்களின் பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கமும் நிறைவேற்றப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
.gif)

