தருமபுரி, ஜூலை 25:
2027-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப் பணி, வணிகம் மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி வழங்கப்பட்டு வருகின்றன. 2027-ஆம் ஆண்டிற்கான விருதுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வாழ்நாள் சாதனை படைத்தவர்கள், உயரிய தரத்திலான பங்களிப்பை வழங்கியவர்கள் மற்றும் சமூக அங்கீகாரம் பெற்ற சாதனையாளர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பொதுவாக விண்ணப்பதாரர்கள் தங்கள் துறையில் தேசிய அல்லது குறைந்தபட்சம் மாநில அளவிலான விருதுகளை ஏற்கனவே பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பெண்கள், சமூகத்தில் பின்தங்கியோர், நலிவடைந்த பிரிவினர், பழங்குடியினர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளில் தகுதியானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் (மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர) இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்
பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்கப்படும். விண்ணப்பதாரர்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31, 2026.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான சாதனையாளர்கள், குறிப்பாக விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பத்ம விருதுக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
.gif)

.jpg)