தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில், நேற்று இரவு முதல் வானிலை மாற்றம் ஏற்பட்டு பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
குறிப்பாக, நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட இண்டூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதேபோல் நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, சோம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இன்றும் காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டமான வானிலை நிலவியதுடன், இடையிடையே சாரல் மற்றும் மிதமான மழையும் பெய்தது. மழை காரணமாக சாலைகளின் ஓரங்களில் மழைநீர் தேங்கியதுடன், சுற்றுப்புறம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
இந்த மழை விவசாய பணிகளுக்கு பெரிதும் உதவும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கோடை வெப்பத்தால் ஈரப்பதம் குறைந்திருந்த விளைநிலங்களுக்கு இந்த மழை புத்துயிர் அளித்துள்ளதாகவும், உழவு பணிகளை மேற்கொள்ள ஏற்ற சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும், நீண்ட நாட்களாக வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களும் மழையை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மாவட்டத்தின் பல பகுதிகளில் மழையை சிறுவர்கள் ஆர்வத்துடன் ரசித்ததுடன், விவசாயிகளும் எதிர்வரும் சாகுபடி பணிகளுக்கான நம்பிக்கையுடன் உள்ளனர். தொடர்ந்து மாவட்டத்தில் மழை நீடித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)