தருமபுரி, ஜூன் 8:
தருமபுரி அரசு மருத்துவமனையில் குடிநீர் குழாய்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றி கழகத்தின் இளைஞரணி சார்பில் மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இந்த மனு வழங்கப்பட்டது.
அந்த மனுவில், தருமபுரி அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடிநீர் வசதிகளை மேம்படுத்தி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோடை காலம் மற்றும் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் நாகராஜ், விஜயன், குணா, சுந்தரவேல், கார்த்திகேயன், வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)