தருமபுரி, ஜூலை 21:
தருமபுரி மாவட்டம் அரூர் பொது விநியோகத் திட்ட வட்டாரத்திற்குட்பட்ட காரப்பாடி கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு, புதிய நகரும் நியாயவிலைக் கடை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். அரூர் பொது விநியோகத் திட்ட வட்டாரத்தில் உள்ள கீரைப்பட்டி புதூர் பகுதிநேர நியாயவிலைக் கடையில் தற்போது 323 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடை வாரத்தின் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் செயல்பட்டு வருகிறது. இதில் காரப்பாடி பகுதியைச் சேர்ந்த 48 குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வருகின்றனர்.
காரப்பாடி கிராம மக்கள் அத்தியாவசியப் பொருட்களை பெற கீரைப்பட்டி புதூர் நியாயவிலைக் கடைக்கு செல்ல சுமார் 10 கிலோமீட்டர் வனப்பகுதி வழியாக பயணிக்க வேண்டிய நிலை இருப்பதால், அவர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் காரப்பாடி கிராமத்தில் நகரும் நியாயவிலைக் கடை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நகரும் நியாயவிலைக் கடை ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
.gif)

.jpg)