![]() |
| குறிப்பு: AI Generated Image. |
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டி பேருந்து நிறுத்தத்தில், அரூர் செல்ல காத்திருந்த பயணிகளை ஏற்றாமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) 1A வழித்தட கடைசி பேருந்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் அரூர் செல்ல பலர் பெருமாள்கோவில்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர். பேருந்து வந்தபோது பயணிகள் கைகாட்டி நிறுத்துமாறு சைகை செய்தும், பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் கடைசி பேருந்து இதுவே என்பதால், அதனை தவறவிட்ட பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக அரூர் செல்ல வேண்டியவர்கள் கோபிநாதம்பட்டி கூட்ரோடு வரை சென்று, அங்கிருந்து வேறு பேருந்துகள் மூலம் பயணிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.
மழைக்காலம் மற்றும் இரவு நேரம் என்பதால் பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் மற்றும் வேலை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. இதனால் பயணிகள் மத்தியில் அதிருப்தியும் வேதனையும் நிலவியது.
பொதுமக்களின் அத்தியாவசிய போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் கடைசி பேருந்து, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகளை ஏற்றாமல் செல்வது கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

