ஒகேனக்கல், ஜூன் 28:
தேசிய போலியோ ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட ஒகேனக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. வழக்கமான தடுப்பூசி அட்டவணையின்படி ஏற்கனவே போலியோ தடுப்பூசி பெற்றிருந்த குழந்தைகளுக்கும், தேசிய போலியோ ஒழிப்பு திட்டத்தின் வழிகாட்டுதலின்படி இந்த சிறப்பு முகாமில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
ஒகேனக்கல் சுற்றுலா தலமாக இருப்பதால், உள்ளூர் மக்களுடன் சுற்றுலாப் பயணிகளின் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், பரிசல் துறை பகுதி மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், முகாமில் சொட்டு மருந்து பெற தவறிய குழந்தைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இந்த முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டனர்.
.gif)

.jpg)