தருமபுரி, ஜூன் 5:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி நகராட்சி மற்றும் மை தருமபுரி அறக்கட்டளை இணைந்து 100 மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு அமைப்புகள் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி, தருமபுரி நகராட்சியுடன் இணைந்து மை தருமபுரி அறக்கட்டளை சார்பில் நகராட்சி எல்லைக்குட்பட்ட அஞ்சலி நகர் பகுதியில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தருமபுரி நகர மன்றத் தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினர்.
நிகழ்ச்சியை மை தருமபுரி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சதீஷ்குமார் ராஜா தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது. அமைப்பாளர்கள் சண்முகம், கணேஷ் மற்றும் தன்னார்வலர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் மரக்கன்று நடவு பணிகளில் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். பசுமை வளத்தை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)