தருமபுரி, ஜூன் 6:
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காசநோய் பிரிவில், காசநோய் மருத்துவ பயனாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 55 காசநோய் மருத்துவ பயனாளிகளுக்கு, தருமபுரி மண்டல கனரா வங்கி அலுவலகத்தின் சார்பில் வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) மருத்துவர் எம். பாலசுப்பிரமணியம், கனரா வங்கி மண்டல மேலாளர் சுலட்சனா, வங்கி மேலாளர் நீலமணிகண்டன் மற்றும் வங்கி அலுவலர் குருபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர்.
அப்போது பேசிய துணை இயக்குநர் மருத்துவர் எம். பாலசுப்பிரமணியம், காசநோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காசநோய் பரிசோதனை செய்து கொண்டு நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், தேவையெனில் நோய் தடுப்பு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், காசநோய்க்கான சிகிச்சை காலம் முழுவதும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், சத்தான உணவுகளை உட்கொண்டு உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
2030-ஆம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத தருமபுரி மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சி மூலம் காசநோய் பயனாளிகளின் ஊட்டச்சத்து தேவையை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய உதவி வழங்கப்பட்டதாக மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)