பாலக்கோடு, ஜூன் 7:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள எலங்காளப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் உற்சாகமாக விரட்டிச் சென்றனர்.
எலங்காளப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி எருது விடும் விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற எருது விடும் விழாவில், எலங்காளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன.
விழாவை முன்னிட்டு கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி மேளதாளங்களுடன் காளைகளுக்கு கோ பூஜை நடத்தினர். தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்ட பின்னர், ஊர் கவுண்டர் காளையை முதலில் அவிழ்த்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியன. அவற்றை விரட்டிச் செல்ல இளைஞர்கள் ஆர்வத்துடன் போட்டியிட்டனர். காளைகள் பாய்ந்தோடிய காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.
இந்த நிகழ்வை காண எலங்காளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர். விழா முழுவதும் உற்சாகமான சூழல் நிலவியது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாலக்கோடு காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியிருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)
.jpg)