பாலக்கோடு, ஜூன் 5:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மேக்கலாம்பட்டி ஏரிக்கரையில் டாக்டர் கலாம் பசுமை நல அமைப்பின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அமைப்பின் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிர்வாகிகள் சீனிவாசன், மாதன், இளங்கோவன், ஜெயராமன், ஆறுமுகம் மற்றும் கெளதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை குறைக்கவும் மரம் வளர்ப்பு மிகவும் அவசியமானது என்றும், சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஏரிக்கரை பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்தனர். நிகழ்ச்சியில் வனத்துறை அலுவலர் அன்பு, பாலக்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)