தருமபுரி, ஜூன் 3:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க உள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக Computer-Aided Design (CAD), Computer-Aided Manufacturing (CAM) மற்றும் Industrial Automation போன்ற தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவராகவும், பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் (EEE) உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
பயிற்சியின் கால அளவு 90 நாட்களாகும். இந்த பயிற்சிகள் சேலம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளன. பயிற்சியில் பங்கேற்கும் தகுதியான நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டங்களில் தங்கி பயிலும் செலவினங்களை TAHDCO ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் தகுதியான நபர்களுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனத்தின் மூலமாகவே வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். தொடக்க மாத ஊதியமாக சுமார் ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை பெறக்கூடிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் சேர விரும்புவோர், TAHDCO அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)