தருமபுரி, ஜூன் 3:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட பெரும்பாலை மற்றும் பாப்பாரப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.06.2026) நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, உயர் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தேவையான அனைத்து வகையான சான்றிதழ்களையும் காலதாமதமின்றி உடனடியாக வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, கிராம கணக்குகள், 'அ' பதிவேடு, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட நில ஆவணங்கள், முதியோர் ஓய்வூதியம், விதவை உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட பதிவேடுகள், சான்றிதழ்கள் மற்றும் நில உரிமை மாற்றம் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார்.
மேலும், அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வருவாய் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பாப்பாரப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மழை அளவீட்டு மானியை பார்வையிட்ட அவர், பருவமழை காலத்தை முன்னிட்டு மழை பதிவுகள் துல்லியமாக கண்காணிக்கப்படும் வகையில் கருவியை முறையாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர், பாப்பாரப்பட்டி ஒண்ணப்பகவுண்டனஅள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாக நூலகத்தையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அங்கு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் புத்தகங்கள், நாற்காலிகள், பெஞ்சுகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)