பாலக்கோடு, மே.13:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அக்குமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில், இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
12 கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றியும், அம்மன் தலை கூடுதல், மாவிளக்கு ஊர்வலம், பூங்கரம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். மேலும், அலகு குத்தி, பால்குடம் எடுத்தும், பல்வேறு சாமி வேடங்கள் அணிந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அத்துடன், அம்மனுக்கு ஆடு, கோழி மற்றும் கிடா பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சாட்டையடி வாங்கியும், வேப்பிலை சாட்டைகளை வீடுகளுக்கு கொண்டு சென்றும் பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர்.
திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் திருவிழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)