தருமபுரி, மே.12:
தருமபுரி புதிய பேருந்து நிலையம் மீண்டும் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பேருந்துகளை எவ்வாறு கண்காணிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் தருமபுரி அடுத்த சோகத்தூர் பகுதியில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, அன்றைய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை தொடர்ந்து, திருவண்ணாமலை, திருப்பத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது வரை நடைமுறையில் இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி நோக்கி வரும் பேருந்துகள் 13.05.2026 முதல் ஒட்டப்பட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நான்கு ரோடு வழியாக புதிய பேருந்து நிலையம் சென்றடைந்து மீண்டும் அதே மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பழைய பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளும் முறையாக கண்காணிக்கப்பட்டு இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பல பேருந்துகள் நிலையத்திற்குள் வராமல் சாலையோரங்களில் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதாகவும், இதனால் முதியவர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் அவதியடைவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் பேருந்து இயக்கத்தை போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கண்காணித்து முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)