தருமபுரி, மே 25:
பாலக்கோடு பேரூராட்சியில் குடிநீர் இணைப்புக்காக பணம் செலுத்தியும் இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி சமூக ஆர்வலர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சிறப்பு பேரூராட்சிக்குட்பட்ட அருந்ததியர் காலனியில் வசித்து வரும் பெருமாள் (56), தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக ரூ.14 ஆயிரம் வைப்புத் தொகையை கடந்த 14.03.2022 அன்று ஸ்டேட் வங்கி மூலம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்றும், பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இதேபோல் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் இணைப்பிற்காக பணம் செலுத்தியிருந்தும், அவர்களுக்கும் இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குடிநீர் விநியோகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக முறையாக நடைபெறவில்லை என்றும், அதனை மீண்டும் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்து, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சிவா, செல்வம், அழகு பெருமாள், குணசேகரன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)