தருமபுரி, மே 30 :
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர், பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளனர்.
மாரண்டஅள்ளி அருகே அம்மானி மல்லாபுரம் அடுத்த கடத்திக்கொள்மேடு கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் - தேவி தம்பதியினரின் மகன் விஜயகுமார், ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் - சுமங்கலி தம்பதியினரின் மகள் செல்வி, பட்டதாரி ஆவார்.
விஜயகுமார் மற்றும் செல்வி ஆகியோர் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் செல்வியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், திருமணத்திற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விஜயகுமார் பலமுறை பேசியும் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததுடன், செல்விக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள காளியம்மன் கோவிலில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து செல்வியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், விஜயகுமாரின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டதுடன், விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது தங்களது உயிருக்கும், குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள புதுமணத் தம்பதியினர், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளனர்.
இந்த மனு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

