பாலக்கோடு, மே 30 :
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 50 அடி ஆழமுள்ள கிணற்றில் சிக்கித் தத்தளித்த 7 அடி நீளமுள்ள நாகப்பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
பாலக்கோடு அடுத்த சின்ன பேகாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிலம்பரசன் (40), தனது 5 ஏக்கர் விவசாய நிலத்தில் சாகுபடி செய்து வருகிறார். வெள்ளிக்கிழமை காலை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றில் உள்ள மின் மோட்டாரை இயக்கச் சென்றபோது, கிணற்றிலிருந்து விசித்திரமான சத்தம் கேட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அவர் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் 20 அடி அளவுக்கு தேங்கியிருந்த தண்ணீரில் 7 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று சிக்கி தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்டார்.
உடனடியாக பாலக்கோடு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கிணற்றில் இறங்குவதற்கான படிக்கட்டுகள் இல்லாததால், கிரேன் உதவியுடன் மீட்புக் குழுவினர் கிணற்றுக்குள் இறங்கி, நாகப்பாம்பை பாதுகாப்பாக உயிருடன் மீட்டனர்.
பின்னர் மீட்கப்பட்ட நாகப்பாம்பு பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த நாகப்பாம்பை பிக்கிலி காப்புக் காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.
கிணற்றில் சிக்கியிருந்த நாகப்பாம்பு நீண்ட நேரம் தத்தளித்தபோதும் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கைக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

