கம்பைநல்லூர், மே.20:
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டாரம் கம்பைநல்லூர் அருகே உள்ள வெதரம்பட்டி கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மா மகத்துவ மையத்தை மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூரு, ஆந்திரா மற்றும் வட இந்திய பகுதிகளில் இருந்து பெறப்பட்ட சுமார் 60 வகை மா ரகங்கள் நடவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நில மேம்பாடு, சாலை அமைப்பு மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து போளையம்பள்ளி ஊராட்சியில் சிறு பாசன ஏரி திட்டத்தின் கீழ் ரூ.6.34 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஏரி புனரமைப்பு பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் மொரப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள் இருப்பு, அவசர சிகிச்சை பிரிவுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, மருத்துவமனைகளை தூய்மையாக பராமரிக்கவும், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை முறையாக வழங்கவும் மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தொப்பம்பட்டியில் ரூ.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார பிரிவு கட்டடப் பணிகளையும் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)