தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தருமபுரியில் இருந்து அரூர் நோக்கி 70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மொரப்பூர் அடுத்த சென்னம்பட்டி அருகே உள்ள வளைவு பகுதியில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பேருந்து கவிழ்ந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து மூன்று 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன.
இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் கர்ப்பிணி பெண் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த கர்ப்பிணி பெண் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும், அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிலர், போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தால் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வளைவு பகுதியில் சென்றபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படாததால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

