ஒகேனக்கல், மே.24:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில், யானை ஒன்று இருசக்கர வாகனத்தை மிதித்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வாலிபர் ஒருவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள யானைகள் தண்ணீர் தேடி அடிக்கடி சாலைகளை கடந்து சென்று வருகின்றன. இந்நிலையில், இன்று காலை பென்னாகரத்தில் இருந்து நாட்றாம்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாட்றாம்பாளையத்தை சேர்ந்த சித்தேஷ் என்பவர், வனப்பகுதி சாலையை கடந்து சென்ற யானையை திடீரென கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த யானை, சாலையில் கிடந்த இருசக்கர வாகனத்தை காலால் மிதித்து சேதப்படுத்திவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. யானையை பார்த்து அதிர்ச்சியடைந்த சித்தேஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். காயமடைந்த அவர் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோடை காலங்களில் வனப்பகுதி சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)