தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாக்கடையில் கலந்து வீணாகி வருவதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினசரி சுமார் 6.5 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதற்காக மாதந்தோறும் சுமார் ரூ.3 லட்சம் வரை பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாரண்டஅள்ளியில் இருந்து பஞ்சப்பள்ளி செல்லும் சாலையோரத்தில் அமைந்துள்ள குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது. உடைந்த குழாயை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீரில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், சீரான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உடைந்த குழாயை உடனடியாக சீரமைத்து, பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் குழாயை சரிசெய்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

