தருமபுரி, மே.23:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) கீழ் தருமபுரி மாவட்டத்தில் 89 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (CBC) பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) அலுவலகங்களில் 29.05.2026 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்கள் சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும், உதவிக்குழு ஊக்குநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதவும் படிக்கவும், கணக்கிடவும் தெரிந்திருக்க வேண்டும். வங்கிகளில் பரிவர்த்தனை செய்த அனுபவம், கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினி திறன் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்ட்ராய்டு கைபேசி பயன்படுத்துதல், SMS மற்றும் WhatsApp மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் ஆகியவை அவசியம் என கூறப்பட்டுள்ளது. வட்டார வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம் பின்வருமாறு:
தருமபுரி – 15,
அரூர் – 10,
காரிமங்கலம் – 11,
மொரப்பூர் – 6,
நல்லம்பள்ளி – 12,
பாலக்கோடு – 10,
பாப்பிரெட்டிப்பட்டி – 7,
பென்னாகரம் – 7,
ஏரியூர் – 4,
கடத்தூர் – 7
என மொத்தம் 89 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.2,500 மதிப்பூதியம் வழங்கப்படும்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)