தமிழ்நாடு அரசின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவர், மாணவியர் விடுதிகளில் 2026-27 கல்வியாண்டிற்கான சேர்க்கை தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 64 அரசு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 36 மாணவர் விடுதிகளும், 28 மாணவியர் விடுதிகளும் அடங்கும். பள்ளி மாணவர்களுக்காக 51 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்காக 13 விடுதிகளும் இயங்கி வருகின்றன.
4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளி விடுதிகளில் சேர தகுதியுடையவர்கள். அதேபோல், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் சேரலாம்.
விடுதிகளில் வழங்கப்படும் வசதிகள்
இலவச தங்கும் வசதி
தினமும் மூன்று வேளை உணவு
4 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 இணை சீருடைகள்
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு NEET, JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான வினா வங்கி நூல்கள் மற்றும் வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும்.
சேர்க்கைக்கான தகுதிகள்
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாணவர்களின் இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தபட்சம் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் இருக்க வேண்டும். இந்த விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினியிடமிருந்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பள்ளி விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் 18.06.2026-க்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் 15.07.2026-க்குள்ளும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் நேரத்தில் மட்டும் அவற்றை சமர்ப்பித்தால் போதுமானது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்காக தனியாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த நலத்திட்டத்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., கேட்டுக் கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)