பென்னாகரம், மே.28:
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், இப்ராஹிம் நபி மற்றும் அவரது மகன் இஸ்மாயில் நபியின் தியாகத்தை நினைவுகூரும் நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் நாள்காட்டிப்படி அஜ் மாதத்தின் பத்தாம் நாளில் பக்ரீத் திருநாள் அனுசரிக்கப்படுகிறது.
பென்னாகரம் ஜாமியா மஸ்ஜித் சார்பில், போளூர் நான்கு ரோடு சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், உலகில் சமத்துவமும் அமைதியும் நிலைக்க வேண்டும் என இறைவனிடம் துவா செய்யப்பட்டது. மேலும், இறைத்தூதரான இப்ராஹிம் நபி தனது மகன் இஸ்மாயிலை இறைவனுக்காக பலியிடத் தயார் ஆன நிகழ்வை நினைவுகூரும் வகையில் பக்ரீத் கொண்டாடப்படுவதாக இமாம்கள் எடுத்துரைத்தனர். இறைவன் அவர்களின் தியாக மனப்பான்மையை கண்டு, இஸ்மாயிலுக்கு பதிலாக ஆட்டை பலியிடுமாறு அருளிய நிகழ்வே பக்ரீத் திருநாளின் அடிப்படையாகும் என கூறப்பட்டது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதலே புத்தாடை அணிந்த இஸ்லாமியர்கள், சிறப்பு தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து, கைகுலுக்கி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், குர்பானி வழங்க இயலாத ஏழை எளிய மக்களுக்கும் இறைச்சி பகிர்ந்தளிக்கும் மனிதநேய பாரம்பரியமும் இந்த நாளில் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சி பென்னாகரம் ஜாமியா மஸ்ஜித் இமாம் மஹாபுப் ஆலாம் தலைமையில் நடைபெற்றது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)