தருமபுரி – ஏப்ரல் 10:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி தலைமை வகித்தார். நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
அமைச்சர் எ.வ. வேலு தனது உரையில், திமுக ஆட்சியில் பென்னாகரம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்தல், மலைப்பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்தல், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கல்வி, நிதி ஒதுக்கீடு, நீட் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் ஒன்றிய அரசை விமர்சித்த அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்காத தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறினார். இதனையடுத்து, காங்கிரஸ் வேட்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். கூட்டம் முடிவில், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலகத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

