பென்னாகரம், ஏப்ரல். 06:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி.கே.எம். தமிழ்குமரன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மார்ச் 30 முதல் ஏப்ரல் 6, 2026 வரை நடைபெறும் வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கையின் இறுதி நாளான இன்று, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வந்த அவர், பென்னாகரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோபு (உதவி ஆணையர் – ஆயம்) அவர்களிடம் வேட்புமனுவை சமர்ப்பித்தார்.
முன்னதாக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வேட்பாளர் தேர்வில் நீண்டநாள் இழுபறிக்கு பின்னர் ஜி.கே.எம். தமிழ்குமரன் இறுதியாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
வேட்புமனு தாக்கல் நிகழ்வில் திமுக வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் தர்மச்செல்வன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி சிற்றரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ். கலைச்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

