தருமபுரி – ஏப்ரல் 06:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “ஜனநாயக திருவிழா” – “என் வாக்கு என் உரிமை” என்ற தலைப்பில் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில், “என் வாக்கு விற்பனைக்கல்ல” என்ற கருத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி நான்கு ரோடு வரை சென்று நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, “என் வாக்கு என் உரிமை” என்ற வாசகத்துடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் திரு. சு. சுந்தர்ராஜன், நேர்முக உதவியாளர் (பொது) திருமதி ஆர்.கே. கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன், வட்டாட்சியர் திரு. ஜெ. சுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

