பாலக்கோடு, ஏப்ரல். 01:
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக நகர கழகம் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பேரூர் கழக செயலாளர் பி.கே. முரளி தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் முருகன், வக்கீல் சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் முர்த்துஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்ரமணி கலந்து கொண்டு, வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
அவர் பேசுகையில், “அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு திமுக வேட்பாளர் மருத்துவர் செந்தில்குமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த வெற்றியை தலைமைக்கு காணிக்கையாக்க வேண்டும். பாலக்கோடு தொகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் கடந்த மக்களவைத் தேர்தலை விட அதிக வாக்குகள் பெற்று, திமுகவின் வலிமையை நிரூபிக்க வேண்டும்,” என்றார்.
மேலும், தமிழக அரசின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் 2026 தேர்தல் வாக்குறுதிகளை வீடு தோறும் சென்று மக்களிடம் எடுத்துரைத்து, வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

