தருமபுரி, ஏப்ரல். 08:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு மனிதநேய சேவைகளை தொடர்ந்து செய்து வரும் மை தருமபுரி அமைப்பு, 200-ஆவது புனித உடலை நல்லடக்கம் செய்து குறிப்பிடத்தக்க சாதனையை பதிவு செய்துள்ளது.
இந்த அமைப்பு தினந்தோறும் பசித்தோருக்கு அன்னதானம் வழங்குதல், இரத்ததானம், ஆதரவற்றோர் மற்றும் ஏழ்மையில் உயிரிழந்தோரின் உடல்களை மரியாதையுடன் நல்லடக்கம் செய்தல் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறது. மேலும், “மணீஷ் மருத்துவ சேவை திட்டம்” மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளோருக்கு மருத்துவ உதவிகளையும் வழங்கி வருகிறது.
குறிப்பாக, 2022 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட அமரர் சேவை மூலம் ஆதரவற்றோர், ஏழ்மையில் உயிரிழந்தோர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களின் உட்பட இதுவரை 200 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளது. மேலும், இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக காசி, ராமேஸ்வரம், காவிரி ஆறு, திருவனந்தபுரம் பரசுராமர் கோவில் போன்ற புண்ணிய ஸ்தலங்களில் திதி வழங்கி வழிபாடுகளும் செய்து வருகின்றனர்.
200-ஆவது புனித உடலுக்கான இறுதி அஞ்சலி நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமைப்பின் இந்த மனிதநேய சேவைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

