தருமபுரி, ஏப்ரல். 01:
தருமபுரி அண்ணாமலை கவுண்டர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. அதிகாலையில் முருகர் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து, திருக்கோவிலில் இருந்து முருகர் வள்ளி–தெய்வானை மற்றும் காவடிகள் புறப்பட்டு, சாலை விநாயகர் கோவில் அருகிலுள்ள சிவன் கோவிலில் வைத்து காவடிகளுக்கு கங்கை பூஜை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மீண்டும் திருக்கோவிலை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து காவடி மற்றும் உற்சவர் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விழா குழுவினர் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

