தருமபுரி – ஏப்ரல் 07:
தருமபுரி ஊராட்சிக்குட்பட்ட முத்துப்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சவுளூர், குண்டல்பட்டி, நடுஅள்ளி, பால்காரன் கொட்டாய் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான மக்கள் கருப்பு கொடிகளை ஏந்தி, சேலம் – கிருஷ்ணகிரி நான்கு வழிச்சாலையில் உள்ள முத்துப்பட்டி பிரிவு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாலக்கோட்டில் இருந்து காரிமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்தை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“எங்கள் பகுதியில் தரைப்பாலம் அமைத்து தராவிட்டால், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம். மேலும், வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் திருப்பி ஒப்படைப்போம்” என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன் மற்றும் வட்டாட்சியர் சுகுமார் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

