தருமபுரி – ஏப்ரல் 14:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.04.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் “என் வாக்கு என் உரிமை”, “ஜனநாயக திருவிழா” போன்ற விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திய மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். சுமார் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இந்த பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கி பாரதிபுரம் வரை சென்று நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு “என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், தேர்தல் விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கரடி உருவம் கொண்ட பொம்மை மற்றும் ரோபோட் (Robot) மூலம் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். அத்துடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மகளிர் திட்ட அலுவலர் திரு. சு. சுந்தர்ராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி இரா. காயத்ரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. சு. சரவணன், வட்டாட்சியர் திரு. ஜெ. சுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வரும் 23.04.2026 அன்று நடைபெறும் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)