தருமபுரி – மார்ச் 26:
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில், நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் Seeman கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பூபதி மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பழனியம்மாள் ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “அரசியல் பணக்காரர்களுக்கானதாக மாறக்கூடாது. உழைக்கும் அடித்தட்டு மக்களின் குரல் அரசியலில் ஒலிக்க வேண்டும். தமிழர்கள் தங்கள் வரலாறு, பெருமை, அறிவியல், வேளாண்மை மரபுகளை மறந்து விட்டனர்” என்று கூறினார்.
மேலும், “இலவசங்களை முன்வைத்து அரசியல் செய்வது வளர்ச்சி அல்ல, அது வீழ்ச்சி. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்களே உண்மையான முன்னேற்றம். சிறந்த கல்வி, தரமான மருத்துவம், தடையற்ற மின்சாரம், சுகாதாரமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதே எங்கள் நோக்கம்” எனத் தெரிவித்தார்.
“வாக்குக்கு பணம் வழங்கும் அரசியலை மாற்ற வேண்டும். பணம், பொருள், இலவசங்களை நம்பி வாக்களிக்காமல், நேர்மையான சேவை மனப்பான்மை கொண்ட வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

